Monday, 7 October 2024


                                    

             

என் தந்தையின் பிறந்த நூற்றாண்டு ஆண்டு அக்டோபர் 13, 2024  தொடக்கத்தைக் குறித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம்.                                                                                                                                                                                                                                    6th Oct.2024

அன்புள்ள அனைவருக்கும்,

அனைவரையும் நீண்ட ஆயுளுடனும் பூரண ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

“நான் இதுவரை (8-1-2021) பயணித்த பாதை” என்ற தலைப்பில் என்னுடைய 72 ஆம் ஆண்டு தொடக்கத்தில் என்னைப் பற்றிய ஒரு விளக்கக்காட்சியையும் சில பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி  (PDF பதிப்பாக ) எழுதப்பட்டது.

PDF பதிப்பு புத்தகத்தின் தொடர்ச்சியாக என்னுடைய 74 ஆம் ஆண்டின் (08/1/2023) தொடக்கத்தில் மீண்டும்  என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்.1..!  முதல் முறையாக புதிய பார்வையில் சில பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி எழுதப்பட்டது. 

23/5/2024 மீண்டும் இரண்டாவது முறை என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்.2..!எனது மனதில் தோன்றியதை இரண்டாவது முறையாக புதிய பார்வையில் எழுதப்பட்டது .

எனவே வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பார்க்கும்போது, எனது முந்தைய PDF வடிவ புத்தகத்தின் நீட்டிப்பை தொடர்ச்சியாக இரண்டு முறை புதிய பார்வையில் எழுதப்பட்டது.

மேலும் தற்போது அதன் தொடர்ச்சியாக  புதிய பார்வையில் எனது திருத்தகப்பனாரின், மறைந்த மோகனூர் மாடபூசி ஸ்ரீ. என். சீனிவாசனின் ,100வது திருநக்ஷத்திரம் (புரட்டாசி அவிட்டம்)  அக்டோபர் 13, 2024 நூற்றாண்டு தொடக்க விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது குறித்து உங்கள் பார்வைக்கு.

பொது வெளியில் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் எழுதவில்லை. ஆனால் எங்களது தந்தையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இதை எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

-------------------------------------------------------------------------------------------------

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி, மறைந்த மோகனூர் மாடபூசி ஸ்ரீ என்.ஸ்ரீனிவாசனின் 100வது திருநக்ஷத்திரம் (புரட்டாசி அவிட்டம்) ஆகாயால் அன்று முதலில் எங்கள் வீட்டில் உள்ள சாளக்கிராமத்திற்கு திருவாராதனை செய்கிறோம்.அதன் பிறகு திருத்தகப்பனாரின் திருவுருவப் படத்திற்கு குடும்ப உறுப்பினர்களாகிய நாங்கள் என் தந்தையின் பிறந்த நூற்றாண்டு ஆண்டு தொடக்கத்தைக் குறித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம். இந்த நாள் எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த மைல்கல்லைக் கொண்டாடும் நேரம்.

ஸ்ரீ என். சீனிவாசன் 83 ஆண்டுகள் வாழ்ந்த குறிப்பிடத்தக்க வாழ்க்கையைக் கொண்டாட, எங்கள் குடும்பம் ஒன்று கூடி, பெருமிதத்துடனும் நன்றியுடனும் பிரார்த்தனை செய்கிறோம்,

நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் மாறியது ஆனால்  தந்தையின்  பெயரைச் சொன்னால் எங்கள் இதயம் நிரம்பி வழிகிறது .

என் தந்தையின் வாழ்க்கையில் நடந்த பல வாழ்க்கை அனுபவங்கள் என் வாழ்க்கை நிகழ்வுகளாக இருப்பதால் என்னைப் பெற்ற தந்தையை நினைத்து கனத்த இதயத்துடனும் கலங்கிய விழிகளுடனும் இதை எழுதுகிறேன்.

ஸ்ரீ M.V. நரசிம்ம ஐயங்கார் மற்றும் ஸ்ரீமதி. நாமகிரி அம்மாள் அவர்களுக்கு திருவண்ணாமலையில் என் தந்தை செப்டம்பர் 29, 1925 இல் பிறந்தார் (அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 15, 1925 என பதிவு செய்யப்பட்டது), என் தாத்தா அப்போது திருவண்ணாமலையில் மாஜிஸ்திரேட்டாகப் பணியில் இருந்தார். தந்தையின் திருநக்ஷத்திரம் புரட்டாசி அவிட்டம். அவரது வாழ்க்கைப் பயணம் அவரது வலுவான மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு ஒரு சான்றாகும்., மேலும் அவர் ஸ்ரீ அஹோபில மடத்தை பக்தியுடன் பின்பற்றியவர்.

எனது தந்தை சிறுவயது முதலே சென்னையில் மட்டுமே வாழ்க்கையை கழித்தார் . ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்து, லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கினார், பின்னர் ஓய்வு பெறும் வரை சென்னையில் உள்ள ஏஜி அலுவலகத்தில் பணியாற்றினார்.

எனது பெற்றோர் திரு.N.ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி வேதம் திருமணம் 18/1/1948 ஞாயிற்றுக்கிழமை 12 Noon  முதல் 1P.M. வரை ஸ்ரீ அஹோபிலா மடம், திருமலை-திருப்பதியில் நிகழ்த்தப்பட்டது.

அவருக்கு ஆதரவாக துணைவியார் ஸ்ரீமதி. வேதம் மற்றும் ஐந்து குழந்தைகள்.

எனது தந்தையின் 60 வது பிறந்த நாள் வீட்டிலேயே கொண்டாடப்பட்டது மற்றும் 80 வது பிறந்த நாள் அருகிலுள்ள கல்யாண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

29 ஏப்ரல் 2008 செவ்வாய்க் கிழமை இரவு 10.40 மணிக்கு எங்கள் தந்தையை நாங்கள் தவறவிட்டோம். இந்த நாள் நான் வாழ்க்கையில் தந்தையை தவறவிட்டதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. அந்த ஆன்மாவுக்கு பணிவான அஞ்சலிகள்.

 அவர்களின் மகள்களில் ஒருவரான , மறைந்த ஸ்ரீமதி விஜயலட்சுமி மற்றும் சமீபத்தில் பிரிந்த அவர்களது மகன்களில் ஒருவரான ஸ்ரீ எஸ். வாசு இப்போது நம்மிடையே இல்லை, ஆனால் அவர்களின் நினைவுகள் வாழ்கின்றன.

மறைந்த என் அப்பா, சகோதரி மற்றும் சமீபத்தில் பிரிந்த சகோதரன் ஆகியோரின் ஆசிர்வாதம் எங்களுக்கு முக்கியம்.

எல்லாம் கடந்து போகும், எதுவும் நிரந்தரமில்லை என்பதை நான் புரிந்துக்கொண்டேன். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்!

இப்போது 92 வயதான என் அம்மா நிறைவான வாழ்க்கையை நடத்துகிறார். அவர் மரபுவழி பெண்மணி.அவரது வாழ்க்கையில் அவர் நிறைய இன்னல்களையும்,சவால்களையும், எதிர்கொண்டு சமாளித்து வருகிறார் அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் ஆசிர்வாதமும் எங்களுக்கு முக்கியம்.

என் தந்தையை அவரது வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டிப்பிடிக்காததற்கு நான் வருந்துகிறேன்.

 நம்முடைய பெற்றோரை கவனித்துக்கொள்வது கடவுளை வணங்குவதற்கு சமம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் வாழும் இடம் வைகுண்டம் என்று எண்ணி மனமுவந்து பெருமாளை வழிபட்டால், அவர் தம் பக்தரை  நாம் வாழும் இடத்தில் வந்து தரிசனம் கொடுத்து அருள்புரிவார் என்பது எனது நம்பிக்கை.

எனது தந்தையின் வாழ்க்கை தொழில்முறை மற்றும் ஆன்மீகத்தின் சரியான கலவையாகும். யாரையும் புண்படுத்தாத மென்மையான குணம் கொண்டவர். அவரது அமைதியான மற்றும் மென்மையான இயல்பு அவரை ஒரு நல்ல மனிதனாக மாற்றியது, மேலும் அவர் எப்போதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஆகியவை நம் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவதற்குத் தேவையான கூறுகள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

என் தந்தை குடும்பத்திற்காக காளையைப் போல் உழைத்தார். அவரது பொறுப்புகள் மற்றும் கடமைகள்களை  கச்சிதமாக முடித்தார். .அவர் ஒருபோதும் பிரச்சினைகளைப் பற்றி வருத்தப்படவில்லை.

எங்கள் வாழ்க்கையை இன்னும் வசதியாக மாற்றவோ அல்லது எங்கள் பிரச்சனையை குறைப்பதற்கு பதிலாக , என் தந்தையின் முகத்தில் எல்லாவற்றையும் விட அவருக்கு பணம் முக்கியமில்லை என்ற சுயமரியாதையை நான் கண்டேன். அவர் வைகுண்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதில் உறுதியாக உள்ளோம்.

அவரது தினசரி வழிபாடு மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மற்றும் ஆன்மீக பயிற்சியின் மீதான அவரது ஆழ்ந்த கடவுள் பக்தியை பிரதிபலித்தது, இது வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில் அவருக்கு உள் அமைதியைக் கொடுத்தது.

என் தந்தை  அடிக்கடி ராமாயணத்தின் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மற்றும் குறிப்பாக தசரா பண்டிகையின் போது பாராயணம் செய்வது வழக்கம்.

எனவே நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் சாளக்கிராமத்திற்கு திருவாராதனை செய்த  பிறகு  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய உள்ளோம். அந்த நாட்களில் என் தந்தை இந்த வகையான வழிபாடுகளை விரும்புவார்.

என் தந்தையின் அப்பா, அம்மா, தம்பி, அக்கா, தங்கை ஆகியவர்களின் நினைவுகள் என்றும் அழியாது; அவர்கள் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் உயிருடன் இருக்கிறார்கள், வாழ்க்கையின் பொக்கிஷங்களாக இருக்கிறார்கள்.

என் தந்தையின் எண்ணங்களும் தொலைநோக்கு பார்வையும் என்னை என்றென்றும் ஊக்குவிக்கின்றன.

என் தந்தை  ஒரு நேர்மையான மகன், ஒரு நல்ல கணவர், ஒரு ஒழுக்கமான அப்பா, அன்பான சகோதரன் மற்றும் அன்பான தாத்தா. இவை அனைத்தையும் தவிர அவர் மற்றவர்களுடன்  சொற்ப சொற்கள் பேச கூடிய மனிதராக இருந்தார்.

இந்த நாள் எப்போதும் என் நினைவில் பொறிக்கப்படும், மேலும் எனது தந்தை மற்றும் கடவுள் எங்களை ஆசீர்வதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்கள் வாழ்க்கையில் அவருடன் இணைந்திருப்பதற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

விதையிலிருந்து ஆலமரம் வளர்வது போல, குடும்பத்தில் என் தந்தை விதைத்த விதைகள் செழிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த அஞ்சலி என் தந்தையின் அன்புக்கும் வலிமைக்கும் நியாயம் செய்யும் என்று நம்புகிறேன். அவருடைய ஆசிர்வாதம் நம்மை வழிநடத்தட்டும்.  கடவுள் நம்மை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் ஆசீர்வதிப்பாராக.

அவர் நமக்குக் கொடுத்த அன்புக்கும் பாடங்களுக்கும் சான்றாக நம் வாழ்க்கையை வாழ்வதே அவருக்குச் செய்யும் ஒரே அஞ்சலி. குடும்ப உறுப்பினர்களுடன் எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எங்கள் இதயங்களில்,என் தந்தை இப்போது இருக்கிறார் மற்றும் எப்போதும் இருப்பார் .

சிலர் சனிக்கிழமைகளை விரும்புகிறார்கள், சிலர் ஞாயிற்றுக்கிழமைகளை விரும்புகிறார்கள், ஆனால் நான் அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கொண்ட நாளை விரும்புகிறேன்.

 எனது தந்தையின் நூற்றாண்டு விழாவை மேலும் மறக்க முடியாததாக மாற்ற இந்த சிறப்பு ஆண்டு முழுவதும் நீங்கள் அனைவரும்  எங்களுடன் பயணம் செய்வீர்கள்  என்று நம்புகிறேன்.

குடும்ப உறுப்பினர்கள் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி, மேலும் அற்புதமான குடும்பம் மற்றும் அற்புதமான நண்பர்களுடன் என்னை ஆசீர்வதித்ததற்காக நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மற்றவர்களுக்கு உதவ எனக்கு உதவிய, ஆரோக்கியமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை எனக்கு பரிசளித்த கடவுளுக்கு நன்றி,

எனக்காக நேரம் ஒதுக்கி என் குடும்பத்தில் கருணையை கொண்டு ஆசீர்வாதம் செய்கின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை, என் உணர்ச்சிப் பெருக்குகளை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

வாழும் காலம் வரை நன்றாக  வாழ்வோம். அதுவரை  எல்லோரையும் வாழ்க வாழ்கவென மனதார வாழ்த்துவோம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம் பேசுவோம்

வணக்கம்.

 அடியேன் மோகனூர் மாடபூசி  எஸ்.கஸ்தூரி ரங்கன்

 98406 06162


Tuesday, 28 May 2024

 


23/5/2024 மீண்டும் இரண்டாவது முறை என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன் !

=================================================

“நான் இதுவரை (8-1-2021) பயணித்த பாதை” என்ற தலைப்பில் என்னுடைய 72 ஆம் ஆண்டு தொடக்கத்தில் என்னைப் பற்றிய ஒரு விளக்கக்காட்சியையும் சில பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தியும் எழுதப்பட்டது. PDF பதிப்பு புத்தகத்தின் தொடர்ச்சியாக என்னுடைய 74 ஆம் ஆண்டின் (08/1/2023) தொடக்கத்தில் மீண்டும்  என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்...!

 வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பார்க்கும்போது, நாம் அனுபவித்த வேதனைகளும், அவற்றைக் கடந்து வந்த வழிகளும் நமக்கு நம்பிக்கையைத் தரும். எனது ஆர்வத்தின் காரணமாக நான் மீண்டும் சில சம்பவகளை    எனது முந்தைய PDF வடிவ புத்தகத்தின் நீட்டிப்பை தொடர்ச்சியாக புதிய பார்வையில் எழுதப்பட்டது.

 23/5/2024 மீண்டும் இரண்டாவது முறை என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன்...!

எனது முந்தைய PDF வடிவ புத்தகத்தின் நீட்டிப்பை தொடர்ச்சியாக மலரும் நினைவுகளை அசைபோட ஒரு இனிமையான சரியான நேரம் . எனவே எனது மனதில் தோன்றியதை இரண்டாவது முறையாக புதிய பார்வையில் எழுதுகிறேன்..

----------------------------------------------------------------------------------------

 என் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக நினைவு கூர்கிறேன். உங்களுக்கு நேரம் அனுமதித்தால் படிக்கவும்.

 நான் இளைஞனாக இருந்த போது, குடும்ப கஷ்டங்களுடன் சமூக மற்றும் கலாச்சார வாழ்விலும் எனக்கு நிறைய கனவுகள் இருந்தன.

நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப் படுத்தப் பட்டு, இந்த வயதில் காலை எழுந்தவுடன் முழங்கால் மற்றும் இடுப்பு வலி ல்லாமல் சுகமாக இருந்தாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையும் வ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது.

ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பள்ளி வடக்குக் கிளையில் பள்ளிப் படிப்பை சில நாட்கள் தொடங்கி, பின் சில மாதங்கள் மாடல் ஆரம்பநிலை பள்ளியிலும், பின்னர் ஜக்ரியா காலனியில் இருந்த சரஸ்வதி வித்யாலயாவில் 5ஆம் வகுப்பு வரையிலும். பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (Main) 12ஆம் வகுப்பு வரை சராசரி மாணவனாக படித்தேன்.

 பெறும்பாலும் என் அப்பாவுடன் சேர்ந்து நான் காலை 9.20 மணிக்கு மின்சார ரயில் பிடித்து மாம்பலத்தில் இறங்கி ராமநாதன் தெருவில் உள்ள என் தாத்தா வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மதிய உணவுப் பெட்டியை எடுத்துக்கொண்டு காலை 9.45 மணியளவில் பள்ளிக்குச் செல்வேன்.

 பள்ளி செல்லும் வழியில் ராமநாதன் தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் இரண்டு பிரதட்சணம் செய்வேன். நான் படித்த அளவுக்கு தான் பிள்ளையார் அவரால் ஆசிர்வதிக்க முடிந்தது.

 நான் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய வகுப்பு (PUC) டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் படிக்கும் போதே வங்கி சேவை அல்லது ஆடிட்டர் ஆக ஆசைப்பட்டேன். புது கல்லூரியில் எனது முதலாம் ஆண்டு வர்த்தகம் (B.Com) படிக்கும் போது நான் கணக்கியல் புத்தகம் (Batliboi ) வாங்கும் போது மேலும் நம்பிக்கை அதிகரித்தது. இதயமும் மூளையும் ஒன்றாக இணைந்தால் தான் லட்சியங்கள் நிறைவேறும். இணையவில்லை.

 எனது கல்லூரி நாட்களில் நான் சாந்தி ஆர்ட்ஸ் அகாடமியின் நிர்வாகத்தில் இணைந் திருந்தேன்.

 மேலும் சஞ்சய் காந்திக்கு நெருக்கமான என் நண்பன் குடந்தை ராமலிங்கத்துடன் (காங்கிரஸ்-ஓ) தேர்தலில் இணைந்து பணிபுரிந்தேன். அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவர் சில ஆண்டுகளில் உயிர் இழந்தார்.

 எனது முந்தைய எழுத்துக்களில் சில விஷயங்களை நான் உள்ளடக்கியிருக்கிறேன். வரிசை நோக்கத்திற்காக நான் புதிய விஷயத்துடன் அந்த விஷயங்களை எழுத வேண்டிய கட்டாயம்.

 நான் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

 புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

 எந்த வித உணவுப் பொருட்களும் எனக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

 ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எனக்கு வந்ததில்லை.·

 அதிக அளவு இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு வந்த போதிலும் நான் எடை போடவில்லை.

 நான் வெளியில் விளையாடும் போது ,தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் மினரல் வாட்டர் பாட்டில் தேடியதில்லை.

 காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

 எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்.

 எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் "பணம்.. பணம்.." என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே.

 தாத்தா, பாட்டிக்கு உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.

 ஆரம்ப ஆண்டுகளில் வீட்டில் சுவர் கடிகாரம் கூட இருக்காது. சிறிய அலாரம் கடிகார மட்டுமே.

 உணவுப் பண்டங்கள் வைத்திருக்க வலை பீரோ தான். சில ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு கட்டத்தில் இரண்டாவது கை fridge குளிர்சாதன பெட்டியை வாங்கினோம்.

 வீடு நிறைய Furniture மரச்சாமான்கள் கிடையாது. நாங்கள் சோபா கம் படுக்கையை மட்டுமே பயன்படுத்தினோம். பெரும்பாலும் தரையில் தான் உட்காருவோம், படுப்போம். நாங்கள் புழங்குவதற்கு நிறைய இடம் இருந்தது.

 எனக்கும் என் அம்மாவுக்கும் இடையே நான் உணவு சாப்பிடும் நேரத்தில் சில நாட்கள் ஒரு சிறு சண்டை வரும். பொதுவாக தினமும் வடாம் அல்லது அப்பளம் இருக்கும். எனக்கு அப்பளம் பொரித்தால் 4 அப்பளம். காச்சினால் 2 அப்பளம். இந்த கூற்று சில நாட்கள் சூடுபிடிக்கும்.ஒரு நாள் அம்மா கோபப்பட்டு தோசை கரண்டியால் என்னை அடித்தார். உடனே அந்த  கரண்டியை  பறித்து உடைத்து விட்டேன். அந்த கரண்டி இன்னும் சமையலறையில் உள்ளது.

 எனது தாத்தா மறைந்த ஸ்ரீ டி.வி.சந்தானம் ஐயங்கார் 1950 ஆம் ஆண்டு எனது தாயாருக்கு ஒரு வீட்டைக் கொடுத்தார்(தற்போது வாழும் இடம்). இப்போது வரை நாங்கள் அதே இடத்தில் தான் வசித்து வருகிறோம். தனி வீட்டை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றியது தான் மாற்றம்.

 எனது தாத்தாவின் குடும்பத்தை அவர்களின் ஆதரவிற்காக நாங்கள் தினமும் நினைவில் கொள்கிறோம்.

 அந்த நாட்களில் படுத்தவுடன் தூக்கம் தான். தூக்கம் வர மாத்திரைகள் தேவைப்பட்டதில்லை. பள்ளி நாட்களில் சைக்கிள் தான் ஒரே வாகனம். அவசரமில்லாத நிதானமான வாழ்க்கை.

 நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர். வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

 அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கிவர்கள்1950 மற்றும் அதைச் சுற்றி பிறந்தவர்கள் தான் இருக்க முடியும்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை விளையாட்டு தான்.

 எங்கள் காலங்களில் திறமை மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர்.

 உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.

 நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.

 அரசாங்கத்திடம் இருந்து இலவசம் பெறும் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை.

 அந்த காலங்களில் (1950 மற்றும் அதைச் சுற்றி பிறந்தவர்கள் ) பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்போது நீங்கள் சொல்லுங்கள்....

 இந்த வாழ்க்கைப் பயணத்தை ஒன்றாக, சமமாக போற்றுவோம். பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

 என் வாழ்வில் நான் நினைத்தபடி பல நடந்ததில்லை. இறைவனிடம்  பக்தியுடன் பல வேண்டி கேட்டேன். நான் கேட்டது எதையும் கொடுக்கவில்லை. அதற்காக நான் நாத்திகன் ஆகவில்லை.

 நடந்தது எதுவோ அதன்படி அதன் போக்கில் வாழ்ந்தேன்கிடைத்தது எதுவோ அமைதியாக அதிலே திருப்தியடைந்து மகிழ்ந்தேன்.

 வாழ்க்கையில் யாரிடமிருந்தும்  எதையும் எப்பொழுதும் எதிர் பார்த்ததில்லை. அதனால் ஏமாற்றங்களும் எனக்கு  அதிகமில்லை.

 திறமைக்கு தகுந்த வாய்ப்பில்லை உண்மை தான் .எனது உழைப்புக்கு தகுந்த வாழ்க்கையில் உயர்வில்லை. எதிர்பார்த்தபடி உத்தியோக பூர்வ வாழ்க்கை அமையவில்லை. எதிர்பார்த்த பல விஷயங்கள் நடக்கவில்லை. துன்பமும் துயரமும் தான் சூழ்ந்தன.

ஆனாலும்  ஏமாற்றமில்லை. வாழ்வில் இழந்தவை அதிகம். பெற்றவை குறைவுதான். ஆனாலும் வருத்தம் ஏதுமில்லை.

ஆகா என்றும் வாழவில்லை .ஓகோ என்றும் வளரவில்லை நடந்தது எல்லாம் நல்லதோ கெட்டதோ எதையும் வெளிக்காட்டாமல் ஆரவாரமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல்  அமைதியாகவே  வாழ்ந்து பழகி விட்டேன்.

என் மகள் சௌ பவித்ரா பிரசித் மெட்ரிகுலேஷனில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், என்னுடைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர்த்தேன். படிப்பில் வெற்றி பெற்ற உடன் அவளுக்கு வேலை வாய்ப்பு விப்ரோ பெங்களூரில் வேலை கிடைத்தது.

 வேலையில் சேர்ந்த பிறகு. MCA வகுப்பில் கலந்து கொள்ள ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னைக்கு வருவார். இன்றும் கூட அவளை BE-ல் சேர்க்காததற்கு நான் வருந்துகிறேன்.

 2000ல் சூளைமேடு எக்ஸ்னோராவின் செயலாளராக நான் பொறுப்பேற்தால், சமூக சேவைக்கான எனது அர்ப்பணிப்பு இன்று வரை தொடர்கிறது, கொரோனா வைரஸின் காலங்களில் நமக்குள் செய்தி அனுப்புதல் மற்றும் நம்மை இணைக்க  வாட்ஸ்அப் நமக்கு உதவியது. நான்கு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட என் அம்மாவைப் கவனித்துக் கொள்வதன் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 ஒரு கோணத்தில் நான் நடுத்தர அளவிலான அதிகாரியாக இருந்தாலும், எனது உத்தியோக வாழ்க்கையில் நான் நன்றாக பணியாற்றியுள்ளேன். நேரடியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாண்புமிகு உணவு அமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்களிடமிருந்து பலமுறை பாராட்டுகளைப் பெற்றுள்ளேன். அதனால் எனக்கு நல்ல செல்வாக்கு கிடைத்தது .

 வாழ்க்கையில் யாருக்காவது  நன்மை செய்தேனோ  இல்லையோ ஆனால் யாருக்கும் நிச்சயமாக தீமை செய்ததில்லை.யாரையும் கெடுத்ததில்லை.

யாரும்  கெட்டு போக வேண்டுமென்று மனதில் நினைத்ததில்லை. வாழ்கவென  வாழ்தியிருக்கிறேன். வீழ்கவென வசை பொழிந்ததில்லை‌.

தினசரி செய்தி தாளில் நீத்தார் செய்தி அறிவிப்பு பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன்.

 சின்னவராக இருந்தால், பரவாயில்லை நாம தப்பிச்சோம் என்றும், பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்து, பரவாயில்லை இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன்.

பொதுவாகவே, அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.

நடந்து வந்த பாதை அதிகம் தான் கடந்து வந்த தொலைவும் வெகு தூரம்தான். ஆனாலும்  நான் இது வரையில் களைப்படைய வில்லை. இன்னும் சில தூரம் நடக்க வேண்டியதுள்ளது அதற்காக இன்னும் சில காலம் வாழ வேண்டியதுள்ளது.

ஆனால் இன்று இளமை குறைந்து விட்டது,திறமை மறைந்து விட்டது, முதுமை வந்து விட்டது. என் வாழ்க்கையின் இறுதிக் கோட்டை தொடுகின்ற நிகழ்வு மட்டும் அமைதியாக நடந்து விட்டால் அதுவே நான் இந்த பூமியில் அடக்கமாக  வாழ்ந்ததற்கான  பரிசு.

பொதுவாக கர்மா தான் என் வாழ்க்கையில் விளையாடுகிறது. கெட்ட கர்மாவிற்கா நான் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கிறேன், நல்ல கர்மாவை சம்பாதிக்க நான் நல்லதை செய்கிறேன். நான் கர்மா கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவன்.

நான் ஆண்டவனிடம் எதையும் வேண்டுவதில்லை. அதனால் என்னை பெற்றவர்களைஎன் வாழ்க்கையில்  உதவிய பெரியவர்களைஎனது வளர்ச்சிக்கு உதவிய எனது அன்பு  நண்பர்களை அன்றாடம்  நினைத்து பார்க்கிறேன்அவர்களை  தினமும்  இரு  கரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன்.

வாழும் காலம் வரை நன்றாக  வாழ்வோம். அதுவரை  எல்லோரையும் வாழ்க வாழ்கவென மனதார வாழ்த்துவோம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம் பேசுவோம்

 வணக்கம்.